2025 ஜனவரி 19ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் கதவு பதிப்பகம் நூலங்காடியில் புத்தக விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவுப் பேராசிரியர் திருமிகு சுகன்யா தேவி தலைமை தாங்கினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மானமிகு வெ.முரளி முன்னிலை வகித்தார்.
மாவிபக’வின் தோழர் அஷ்ரஃப்தீன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.
செழியனின் உலக சினிமா நூலை தோழர் கேகே அறிமுகப்படுத்தினார்.
மதிகண்ணனின் ‘விரிவாக்கப்பகுதி’ கணினி சொன்ன கதைகள் நூல் குறித்து, எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ந.முருகேசபாண்டியன் உரையாடலும் கலந்துரையாடலும் நடத்தினார். அவருடைய உரை வெறுமனே கதைகள் குறித்ததாக மட்டும் இல்லாமல் கதைகள் முன்வைக்கும் கருத்தியல் தொடர்பானதாகவும் இருந்தது மற்றவர்களையும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் செய்தது. கலந்துரையாடலில் மானமிகு விடுதலை ஆதவன், திருமிகு குருசாமி, தோழர் மூர்த்தி, திருமிகு ஜெயராம், தோழர் சு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை செழுமைப்படுத்தினர்.
இந்தக் கதைகளில் கதை சொல்வதைத் தாண்டியும் கதைகளின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகள் முக்கியமானதாகப்பட்டதால் கதைகளின் நகர்வே கேள்விகளை மையப்படுத்தியதாகவே இருந்தது என்ற பொருண்மையில் நூலாசிரியர் தோழர் மதிகண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார்.
25 பேர்வரை கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் நடிப்புச் சுதேசிகளின் பொறுப்பாளர் தோழர் முனியசாமி நன்றி கூறினார்.